நாமல் ராஜபக்ஷ முன்னிலையானதை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் பதற்றமான சூழல் உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26.02.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு பெருந்தொகையான மக்கள் கூடி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக, சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதிக அளவில் பொலிஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் யூடியூப் சேனல் வைத்திருக்கும் லாலுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்தி அமைதியை பேணுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், வாக்குவாதம் ஏற்படுத்திய நபர், “நாங்கள் நாமல் ராஜபக்ஷவை ஆதரிக்க வந்த குழுவாக இல்லை” என பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலைமைக்கேற்ப, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பாக இன்னும் மக்கள் திரண்டுக்கொண்டிருப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



