ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று (23) ஜெனீவாவுக்கு பயணமானது.
இந்த குழுவினர் 28 ஆம் திகதி வரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றுவார்கள். அத்துடன், அமைச்சர் விஜித ஹேரத் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான வரைவினை கடுமையாக எதிர்ப்பதற்கும், 51/1 பிரேரணையை நிராகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதில், 2009 போரின் இறுதி கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட கொடுமைகள், சித்திரவதைகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பொறுப்புக் கூறல் போன்றவை மீண்டும் உலகளவில் பேசப்படுவதை இலங்கை அரசாங்கம் தடுக்கும் முயற்சியில் உள்ளது.
பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், 2009 யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் நீதி தேடல் தொடர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தமது மக்கள் இன்னும் நீதி பெறவில்லை என தமிழ் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.
உள்ளகப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உறுதியளித்தாலும், பல தமிழ் அமைப்புகள் மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கங்கள், இது போதுமானதாக இல்லை எனக் கூறுகின்றன. அவர்கள் சர்வதேச விசாரணை மற்றும் பொறிமுறைகள் தொடர வேண்டும் எனக் கோருகின்றனர்.
அதேநேரம், அமெரிக்காவின் விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 பிரேரணையை வலுவிழக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழ் சமூகமும் அவர்களின் ஆதரவாளர்களும், இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
முன்னைய அரசுகளின் நிலையையும், போர் குற்றவாளிகளை காப்பாற்றும் பணியையும் இலங்கையின் அனுர அரசும் தொடர்வது இதன் மூலம் தெளிவாகின்றது.




