பருத்தித்துறை வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பாடசாலைக்குள் சில காலமாக நிலவும் முரண்பாட்டின் தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பு நடந்துள்ளதாகவும், இது முறையற்ற நடவடிக்கையெனவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றம்சுமத்துகிறார்கள்.
வடஇந்து பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் அங்கம் வகித்த ஒருவர், நிர்வாகத்தின் சில முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து, அவருடன் பாடசாலை நிர்வாகத்துக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கேள்வி கேட்டவர் பழைய மாணவர் சங்க நிர்வாகத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.
இரு தரப்பு முரண்பாடு பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.
இந்த பின்னணியில், அண்மையில் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியில் சர்ச்சை ஏற்பட்டது. பழைய மாணவர் சங்க நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்டவரும் மெய்வல்லுனர் போட்டி சர்ச்சை தொடர்பில் பேச சென்றிருந்தார்.
அங்கு முரண்பாட்டையடுத்து அவர் வெளியேறிச் சென்ற போது, பாடசாலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயற்படும் பெற்றார் இருவர், அவரை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றனர். அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த நபர் தம்மை தாக்க வந்ததாகவும், தமது பாதுகாப்புக்கு பிரச்சினையெனவும் குறிப்பிட்டு ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாட மாணவர்களின் பெற்றோர் எதிர்வரும் புதன்கிழமை பாடசாலைக்கு கட்டாயமாக வர வேண்டுமன பாடசாலை அபிவிருத்திசபை என்ற பெயரில் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஒரு தரப்பு கூட்டாக செயற்பட்டு, இந்த போராட்டத்தை தூண்டி வருகிறதா? நிர்வாகரீதியான பிரச்சினைகளை கேள்வி கேட்டவருடன் மோத மாணவர்களின் கல்வியை ஆசிரியர்கள் பணயம் வைக்கலாமா என பெற்றோர் கொதித்துப் போயுள்ளனர்.
புதன்கிழமை கூட்டத்துக்கு பெற்றோர் வழவழைக்கப்பட்டு, மாணவர்களின் மூலம் போராட்டத்தை தூண்ட முயற்சித்தால் தாம் பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்போம் என பெற்றோர் சிலர் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்பக்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இந்த விவகாரத்தின் மேலும் சில விடயங்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும்.




