சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு கடத்தலுக்கு உட்பட்டவர்கள் கராச்சி விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற அதிகாரிகளின் தகவலின் படி, சவுதி அரேபிய அதிகாரிகள் கடந்த 48 மணி நேரத்திற்குள் 94 பாகிஸ்தானியர்களை நாடுகடத்தியுள்ளனர்.
இந்த பாகிஸ்தானியர்கள், பல்வேறு காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டுள்ளனர். கறுப்பு பட்டியலில் இடம்பெற்றவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல், பணியிடத்தில் இருந்து தலைமறைவு, ஒப்பந்தங்களை மீறுதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் 39 பாகிஸ்தானியர்களை, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக கடந்த இரண்டு நாட்களில் நாடுகடத்தியுள்ளதாக ஜியோ நியூஸ் அறிவித்துள்ளது.
இந்த நாடு கடத்தல்கள், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாகிஸ்தானிய தொழிலாளர்களின் நிலைமையை மேலும் கடுமைப்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள், குறிப்பாக குடியேற்ற சட்டங்கள் மற்றும் வருமானத்தைப் பற்றிய பல பிரச்சனைகளும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கின்றன.



