கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி கைதாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் இருக்கும் கணவனுக்காக உணவுப் பொருட்களுடன் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற 27 வயதுடைய மனைவி நேற்று (18) சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி 3ம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை, ஒரு மாதத்திற்கு முன்னர் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று பகல் குறித்த நபரின் மனைவி சிறைச்சாலைக்கு வருகை தந்து, உணவுப் பொருட்கள் மற்றும் புகையிலை வழங்க முயன்றபோது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது புகையிலைக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்ததோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



