வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனின் கடின உழைப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையின் இறுதியில், ஊழலுக்கு எதிரான தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
லஞ்சம் வாங்கும் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தனது அரசாங்கத்தின் கீழ் ஊழல் செய்வதற்குப் பயப்படும் சமூகத்தை உருவாக்குவதாகவும், இதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
“லஞ்சம் வாங்குவோருக்கு எந்த மன்னிப்பும் இல்லை! என உறுதியாக அறிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்க அதிகாரிகளிடையே நடைபெறும் எந்தவொரு ஊழலையும் சகிப்பதற்கில்லை என்றும், ஊழலில் ஈடுபட நினைப்பவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது அரசாங்க உறுப்பினர்களில் யாராவது லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டால், அவர்கள் மீது எந்தவித பாதுகாப்பும் வழங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி விளக்கமாக தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்குள் தான் செயல்படுவதை உறுதிப்படுத்திய அவர், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமெனில், மக்களின் நம்பிக்கையை வென்றே ஆக வேண்டும் என்றும், அதற்காக ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




