பிரபல ஹொலிவுட் நடிகர் ஒருவரின் சுற்றுச்சூழல் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், விஞ்ஞானிகளால் புதிய தவளை இனத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஈக்குவடாரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தவளை இனத்திற்குப் பிரபல ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வின் போது, விஞ்ஞானிகள் ஏழு புதிய தவளை இனங்களை கண்டறிந்ததுடன், அதில் ஒன்றிற்கு ‘ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்’ என பெயரிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்குவடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்குவடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
புதிதாக கண்டறியப்பட்ட இந்த தவளைகள், ஈக்குவடாரின் எல் ஓரோ மாகாணத்தின் மேற்கு மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன. கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோலுடன் காணப்படும் இவை, நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டதாகும்.
மேலும், இந்த இனத்தவளைகள் கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீற்றர் உயரத்தில் வாழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் உலகப் புகழைப் பெற்ற நடிகர் மற்றும் ஒஸ்கார் விருது பெற்ற லியோனார்டோ டிகாப்ரியோ, திரைப்படக் களத்தில் மட்டுமன்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தனித்துவமான பங்களிப்பு செய்துவருகிறார்.
1998ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையை’ உருவாக்கிய அவர், உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார்.
ஈக்குவடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த அவரின் அறக்கட்டளை முக்கியமான குரலாக இருந்தது. அவரது சுற்றுச்சூழல் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், விஞ்ஞானிகள் இந்த புதிய தவளை இனத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர்.




