சீனாவின் செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயனர் தரவுகளைச் சேமிப்பது மற்றும் கையாள்வது தொடர்பாக எழுந்த சந்தேகங்களை கருத்தில் கொண்டு, இதற்கான மதிப்பாய்வு முடியும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீப்சீக்கின் ஆர்1 சாட்பொட் அதன் மிகுந்த செயல்திறன் காரணமாக குறுகிய காலத்திற்குள் உலகளவில் அதிக பயனர்களை ஈர்த்ததோடு, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையிலும் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால், பயனர் தரவுகளை சேமிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இந்த செயலிக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையகம், டீப்சீக் பயனர் தரவுகளை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து மதிப்பீடு செய்யும் வரை இந்த செயலியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, டீப்சீக்கிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு சீன AI நிறுவனம் பதிலளித்து, “உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவிலேயே பரிசீலிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறோம்” என்று தகவல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.



