கால்நடை பண்ணையொன்றில் வளர்க்கப்பட்ட ஆடுகள் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலவாக்கலை, ஹொலிரூட் ரத்னில்கல வீடமைப்பு திட்டத்திலுள்ள கால்நடை பண்ணையொன்றில் 7 ஆடுகளும் ஒரு வளர்ப்பு நாயும் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பண்ணையின் உரிமையாளர் ரொபர்ட், தனது பண்ணையில் நேற்று (16.02.2025) நான்கு ஆடுகளும், இன்று (17ம் திகதி) மேலும் மூன்று ஆடுகளும் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது செல்லப்பிராணி நாயும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
பண்ணையின் பின்பகுதி இடிக்கப்பட்டதுடன், சில குழுவினரோ அல்லது நபர்களோ கால்நடைகளுக்கு விஷம் வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மூன்று ஆடுகள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக நுவரெலியா மற்றும் பேராதனை கால்நடை மருத்துவப் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அரச இரசாயன பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தலவாக்கலை கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்