23 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரால் சிறையில் இருந்து பொலிவுட் நடிகை ஒருவருக்கு ஜெட் விமானம் பரிசளிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும் இலங்கையில் பிறந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு காதலர் தினத்தன்று ஒரு தனியார் ஜெட் விமானத்தை பரிசாக அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ள குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர், அந்த தனியார் ஜெட் விமானத்தில் அவரது பெயரின் முதலெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் பதிவு எண் அவரது பிறந்த திகதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ நீங்கள் எப்போதும் படப்பிடிப்புக்காக உலகம் முழுவதும் பறக்கிறீர்கள், இப்போது இந்த ஜெட் விமானம் மூலம், உங்கள் பயணம் உங்கள் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்,” என்று சுகேஷ் சந்திரசேகர் எழுதிய குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தமது கடிதத்தில், குறித்த விமானத்துக்கு வரி செலுத்துவதாகவும், எனவே அதனை யாரும் சட்டவிரோதமானது என்று கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.
200 கோடி ரூபாய்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, பல குற்றங்கள் தொடர்பில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர் மொத்தம் 23 வழக்குகளில் தொடர்புடையவராக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



