அம்பாறை மாவட்டத்தில் புத்தங்கல் பிரதேசம், நீண்ட காலமாக குப்பை மலையாகக் காணப்பட்ட நிலையில், “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயற்திட்டத்தின் மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் புத்தங்கல் ஆரண்ய சேனாசன வனப்பகுதியில் தொடர்ந்து கொட்டப்பட்டதன் காரணமாக, அங்கு பெரிய அளவில் குப்பை மலை உருவாகி இருந்தது. இதனால், காட்டு யானைகள் உணவு தேடுவதற்காக அந்த இடத்திற்கு வரத் தொடங்கியதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியது.
இந்த குப்பை மலை மற்றும் யானை தாக்குதல் காரணமாக கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 65 வயது முதியவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகினர். முதியவர் உயிரிழந்ததுடன், பொலிஸ் அதிகாரி நீண்ட நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னரே வீடு திரும்பினார்.
அதேபோன்று, 2024ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், குப்பையில் இருந்த இரசாயன கலவைகளை உணவாக உட்கொண்டதால் காட்டுயானையொன்று உயிரிழந்த சம்பவமும் பதிவாகியது.
இந்நிலையில், 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் திகதி, “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயற்றிட்டத்தின் கீழ் புத்தங்கல் குப்பை மலை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.
காட்டு யானைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக மாறிய இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருப்பதை அம்பாறை சிவில் சமூக அமைப்புகள் பாராட்டியுள்ளன.




