இலங்கையில் சுவாசத்துடன் தொடர்புடைய நோய்கள் தற்போது அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “முன்பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், அவர்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரும், சிறுநீரகப் பிரச்சினை மற்றும் நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தற்போதைய காலநிலை மற்றும் சுவாச நோய்களின் அபாயங்களை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
- இதேவேளை, அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்து வரும் காற்றின் மாசுபாடு கர்ப்பிணித் தாய்மார்களின் கருவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ ஆய்வுகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலும் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.