மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் காணிகளில் காட்டு யானைகள் புகுந்து, பல ஏக்கர் நிலங்களில் செய்கைபண்ணப்பட்ட பெரும்போக வேளாண்மை பயிர்களை அழித்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்குப் பிறகு மீதமாக இருந்த வயல் நிலங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் பெரும் சிக்கலில் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அறுவடை தொடங்கும் முன்பே பெரும்பாலான பயிர்கள் அழிவுக்கு உள்ளாகியுள்ளதால், அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
காட்டுயானைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், விவசாயிகள் இரவு முழுவதும் விழித்திருந்து வயல்களை பாதுகாக்கும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க ஏதேனும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், குறிப்பாக படுவாங்கரை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




