[embedyt] https://www.youtube.com/watch?v=rM0j_fR7tUI[/embedyt]
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துநகர் கிராம விவசாயிகள், கடந்த 52 வருடங்களாக தங்களின் கிராமத்தை சூழ உள்ள காணிகளில் மூன்று விவசாய சம்மேளனங்கள் ஊடாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்நிலங்கள் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமானவை எனக் கூறி, அவற்றை இந்திய சோலர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் முயன்று வருவது தெரியவந்துள்ளது. இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களிலும் சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறு போகத்திற்கான உழவு மற்றும் விதைப்பு நடவடிக்கைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். சுமார் 100க்கு அதிகமான ஏக்கர் காணிகளில் சிறுபோக விவசாயம் செய்து வந்த விவசாயிகள், இம்முறை 25 ஏக்கரில் மாத்திரமே விவசாயம் செய்ய முடிந்துள்ளது. குறிப்பாக, அரசாங்கம் இப்பகுதியில் உள்ள வயல்களுக்கான வாய்க்கால், வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மறுக்கின்றது. இதனால் விவசாய நிலங்கள் சிறுபோக பயிர் செய்கைக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் கூறியவாறு தங்களின் நிலங்களை மீட்டு தருவார்கள் என மக்கள் நம்பிய போதும், இதுவரை உரிய தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். மேலும், குறித்த இந்திய நிறுவனம், விவசாயிகளை நேரடியாக நிலங்களில் இருந்து அகற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகளால் தங்களுடைய நிலங்களை மீட்பதற்காக உயர் நீதிமன்றத்தில் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வழக்கில், தற்பொழுது குறித்த இந்திய நிறுவனங்கள் தன்னார்வ எதிராளிகளாக உள் நுழைந்து வழக்கை முன்னெடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் குறித்த காணிகள் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது என்பது தெளிவாகின்றது. அத்துடன் திருகோணமலை நீதிமன்றம் ஊடாகவும் தங்களுடைய நிலங்களிலிருந்து தங்களை எழுப்புவதற்கான முயற்சிகளை துறைமுக அதிகார சபை மேற்கொண்டு வருவதையும், விவசாயிகளுக்கு தனிப்பட ரீதியில் காணிகளில் இருந்து வெளியேறுமாறு உத்தரவுகள் அனுப்பப்படுவதையும் குறிப்பிடுகின்றனர். அதே சமயம், குறித்த விடயம் தொடர்பில் தெளிவாக அறிந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்கிமன ஆகியோரும் இன்னும் அமைதியாகவும், விவசாயிகளை சந்திக்காமலும் இருப்பது விவசாயிகளுக்கு மேலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.




