29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையே இன்று பரபரப்பாக பேசப்படும் விடயமாகியுள்ளது.

விகாரை கட்டப்பட்டு, கலசம் வைக்கப்பட்ட சம்பவமெல்லாம் பல காலத்தின் முன்னரே முடிந்து விட்டது. இதனால் விகாரை கட்டப்பட்டது தமிழர்களுக்கும், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கட்சிகளுக்கும் பிரச்சினையல்ல. தையிட்டியில் விகாரை கட்டப்படுவது இரகசியமாக- யாருக்கும் தெரியாமல் நடந்த விவகாரமல்ல.

அது ஊருக்கே தெரிந்த விடயம். ஊடகங்களுக்கும் தெரிந்த விடயம். செய்திகளை படிக்கும் மக்களுக்கும் தெரிந்த விடயம்.

யாழ் மாவட்டத்திலேயே உயரமான விகாரையென்ற பில்டப் உடன் இதன் திறப்பு விழா நடந்து… அதை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் தொடங்கிய பின்னர், அதை பொலிசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதை தொடர்ந்தே பரபரப்பாகியுள்ளது.

அண்மைக்காலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வலி வடக்கு பிரதேசசபையே குற்றவாளி

நன்றாக கவனிக்கவும். விகாரை கட்டப்பட்டது இரகசியமல்ல. அது ஊருக்கும் தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும். செய்தி படிப்பவர்களுக்கும் தெரியும். தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும்.

இந்த இடம்தான் இப்பொழுது பலராலும் சுட்டிக்காட்டப்படும் விடயமாகியுள்ளது. விகாரை கட்டப்பட ஆரம்பித்த போதே, தமிழ் தரப்பினால் மிக சுலபமாக தடுத்து நிறுத்த வாய்ப்பிருந்தும், அதை செய்யாமல் இப்பொழுது, விகாரையை இடிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் முஸ்டியை முறுக்க… அர்ச்சுனா அரைவேக்காட்டு தனமாக கதைக்க.. சிங்கள இனவாதிகள் அவல் கிடைத்த பூரிப்பில் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்ப- தையிட்டி விவகாரம் உணர்திறன்மிக்க விடயமாகியுள்ளது.

யுத்தத்தை வெற்றிபெற்றதாக நினைக்கும் இராணுவம்… எதையும், எப்படியும் செய்யலாமென நினைக்கும் இராணுவம்… பௌத்த மத அடையாளங்களை நாடு முழுவதும் எற்படுத்துவதை நோக்கமாக கொண்ட அரச இயந்திரம்… இலங்கை சிங்களவர்களின் பூர்வீக நாடு என கருதும் இனம்- அப்படித்தானே நடப்பார்கள். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் விகாரை கட்டுவார்கள். இன மேலாதிக்க உணர்வுள்ள தரப்புகளெல்லாம் அதை செய்யும்.

நமது நிலங்களை பாதுகாக்க வேண்டுமென்ற கூட்டு பொறுப்புணர்வு தமிழ் தரப்பிடமே இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்திருந்திருந்தால், தையிட்டியில் விகாரை அமைக்காமல் தடுத்திருக்க முடியும்.

தையிட்டியில் சட்டவிரோதமாக, தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டது- வலி வடக்கு பிரதேசசபையின் மெத்தனமான போக்கினாலேயே. வலி வடக்கு பிரதேசசபை சிறிதேனும், செயல்திறனாக… நிலங்களை பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புடன் இருந்திருந்தால், இந்த நிலைமையேற்பட்டிருக்காது.

என்றாலும், வலி வடக்கிலுள்ள சில உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அக்கறையுடன் இருந்துள்ளனர். அவர்களின் அக்கறையினாலேயே, விகாரை விவகாரத்தில் வலி வடக்கு பிரதேசசபை எங்கே சறுக்கியது என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ள முடிகிறது.

விகாரையும் பின்னணியும்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ரஜமஹா விகாரைக்கான பணிகள் 2018ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.  அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காங்கேசன்துறை துறைமுக திறப்பு விழாவுக்கு வந்த சமயத்தில், விகாரைக்கு அடிக்கல் நாட்ட வருவார் என கூறப்பட்டது. என்றாலும், நேர நெருக்கடி ஏற்பட்டதால் மைத்திரி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை. அப்போதைய ஆளுனர் ரெஜினோல்ட் குரே அடிக்கல் நாட்டினார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ரெஜினோல்ட் குரே அடிக்கல் நாட்டிய இடத்தில் இந்த விகாரை கட்டப்படவில்லை. அதற்கு அண்மையாக உள்ள கிட்டத்தட்ட 2 ஏக்கர் நிலத்தில் இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. அது 8 பேருக்கு சொந்தமான தனியார் காணி.

அடிக்கல் நாட்டப்பட்டதற்கு அண்மையாக- அடிக்கல் நாட்டப்படுமென முன்னர் குறிப்பிடப்பட்ட இடத்தில் 1980களின் நடுப்பகுதி வரை சிறியளவிலான விகாரையொன்று இருந்தது. எனினும், அது தொன்மையான விகாரையல்ல. 20 பரப்பு காணியில் அந்த விகாரையிருந்தது.

சிங்கள தனிநபர் ஒருவரினால் நயினாதீவு, காங்கேசன்துறை விகாரைகளிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் அந்த விகாரையிருந்தது. அந்த இடம் சிங்களவர் பூர்வீகமாக வாழ்ந்த காணியுமல்ல. 1947ஆம் ஆண்டின் வெளிப்படுத்தல் உறுதியின் மூலமே குறிப்பிட்ட சிங்கள நபர் அந்த காணியை உரிமை கோரியிருந்தார். அந்த காணியின் பெயர் உளுத்தன்கலட்டி என்ற போதும், அந்த வெளிப்படுத்தல் உறுதியில் சிங்கள கலட்டி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த விகாரையை 1980களின் நடுப்பகுதியில் புளொட் இயக்கத்தினர் உடைத்தனர். அதன்பின் அந்த காணியிலும் மக்கள் குடியிருந்தனர். இதன்பின்னர் 1990களில் இடப்பெயர்வுடன் அனைத்து மக்களும் பிரதேசத்தை விட்டு வெளியேறினர்.

யுத்தத்தின் பின் மக்கள் மீளகுடியமர்ந்த போது, முன்னர் விகாரையிருந்த காணியிலும் மக்கள் குடியிருந்தனர். அந்த குடும்பத்துக்கும் குழாய் கிணறும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தமது காணியென பிக்குகள் உரிமைகோரியதையடுத்து, மாவட்ட செயலகத்தினால் அந்த காணியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, பிக்குகளிடம் வழங்கப்பட்டது.

அந்த காணியிலேயே விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டாலும்,  அதற்கு அண்மையாக உள்ள தனியார் காணிகளிலேயே தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய காணி- சிங்களவர் வெளிப்படுத்தல் உறுதி முடித்த காணி- இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு அடுத்ததற்கு அடுத்ததாக உள்ள காணியிலேயே விகாரை கட்டப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் விகாரை கட்டப்படாமல், தமிழர்களின் காணிகளை அடத்தாக பிடித்து விகாரை கட்டப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை. தற்போது விகாரை கட்டப்பட்ட இடத்தில் சிறியளவான அரச மரமொன்று உள்ளது. அதனால் அந்த இடத்தை தெரிவு செய்திருக்கக்கூடும்.

வலி வடக்கு பிரதேசசபையின் மெத்தனம்

2019 ஜூலை 15ஆம் திகதி அப்போதைய வலி வடக்கு பிரதேசசபையின் உறுப்பினரான  எஸ்.சஜீவன், அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும், சபையின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் அனுமதியற்ற விதத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளது, இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அபாய எச்சரிக்கையின் பரிமாணத்தை அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தன் புரிந்து கொள்ளவில்லை அல்லது பொறுப்புணர்வின்றி செயற்பட்டார் என கருதத்தக்க சம்பவங்களே அதன்பின்னர் நடந்துள்ளது.

அவரது பொறுப்புணர்வின்மை, சுலபமாக தடுத்திருக்கக்கூடிய விகாரை இன்று விஸ்பரூபம் எடுத்துள்ளது.

விகாரை தொடர்பில் தவறான கருத்துக்களை குறிப்பிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் அவர் செயற்பட்டதால், விகாரை அமைப்பவர்களுக்கு எந்த நெருக்கடியுமின்றி செயற்படும் வாய்ப்பு ஏற்பட்டது.

படைத்தரப்பு, ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதிக்கக் கூடாது என்பதாலா, அல்லது அதன் தார்ப்பரியம் புரியாமலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலா அவர் அப்படி செயற்பட்டார் என்பது தெரியவில்லை.

சபை அமர்வு ஒன்றின் போது, அனுமதியின்றி அமைக்கப்படும் விகாரைப் பணிகளை இடைநிறுத்தும்படி கடிதம் அனுப்புமாறு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் கேட்டுக் கொண்டார்.

இதன்போது, தவிசாளர் தவறான தகவலொன்றை சபையில் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை மேலெழ விடாமல் தடுத்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையில் அனுமதி பெற்று விகாரை அமைக்கப்படுகிறது என தவிசாளர் குறிப்பிட்டார். இது தொடர்பாக பிரதேசசபையில் பேணப்படும், கூட்ட குறிப்புக்களை தமிழ்பக்கம் பெற்றது.

இந்த விடயம் தொடர்பாக, மாவை சேனாதிராசாவின் மகன் சே.கலையமுதன் ஒருமுறை கேள்வியெழுப்பிய போது, விகாரை அமைந்துள்ள பகுதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதால் தம்மால் நடவடிக்கையெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதன்போதும் காணி உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு உறுப்பினரான கைலைவாசன் சீதாராமன், பொதுநலன் வழக்கு தொடரலாமா என்றும் யோசனை தெரிவித்தார்.

இவை எதற்கும் தவிசாளர் உடன்படவில்லை.

மிகச்சாதாரணமாக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலே விகாரை அமைக்கப்படுவது இடைநிறுத்தப்பட்டிருக்கும். என்றாலும், வலி வடக்கு தவிசாளர் அவ்வளவு “அரசியல் பொறுப்புணர்வு“ மிக்கவராக இருந்திருக்கவில்லை. வலி வடக்கு பிரதேசசபையின் பெரும்பாலான உறுப்பினர்களும் ஒரு அளவுக்கு மீறி இதில் அக்கறை செலுத்தவில்லையென்பதே உண்மை.

தையிட்டி விகாரை தொடர்பில் வலி வடக்கு பிரதேசசபையில் பலமுறை பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தவிசாளர் சாக்குபோக்கும், தவறான தகவல்களை குறிப்பிட்டும் சபையை சமாளித்துள்ளார் என கூட்ட அறிக்கைகளை அவதானிக்கையில் புலப்படுகிறது.

சபையில் இந்த விவகாரம் குறித்து எஸ்.சஜீவன் ஒருமுறை பிரஸ்தாபித்த போது, அது உங்களது வட்டாரமல்ல, பிறகெதற்கு பிரச்சினைப்படுகிறீர்கள் என்ற சாரப்பட பதில் கேள்வியெழுப்பியிருந்தார். விகாரை அமைக்கப்பட்டுள்ள வட்டார உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்தவர்தான்.

2022 பெப்ரவரி காலப்பகுதியில் எஸ்.சஜீவன் கேள்வியெழுப்பிய போது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் அந்த விகாரை கட்டப்படுகிறது என பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, உறுப்பினர் எஸ்.சஜீவன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் 2022 ஜூலையில், நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் விகாரையின் அனுமதி தொடர்பில் தகவல் கோரினார். அதற்கு வழங்கப்பட்ட பதிலில், குறிப்பிட்ட விகாரைக்கு தாம் அனுமதியளிக்கவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, வலி வடக்கு பிரதேசசபையில் 2022 ஜூலை மாதத்தில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கட்டுமானத்தை நிறுத்த சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டதற்கு இணைக்க, 2022 ஓகஸ்ட் மாதத்தில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

காணி உரிமையாளர்களும் பின்னடிப்பு

இந்த சமயத்தில், தீர்மானத்தை அனுப்பி வைக்க தவிசாளர் தயங்கியதாகவும், “பயமின்றி அனுப்புங்கள். பயமாக இருந்தால் சபையின் தீர்மானத்தை தெரியப்படுத்துகிறேன் என அனுப்புங்கள்“ என தவிசாளரிடம் குறிப்பிட்டதாகவும் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

அதன்படியே கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தை புத்தசாசன அமைச்சிற்கு ஜனாதிபதி செயலகம் அனுப்பி, புத்த சாசன அமைச்சு பதிலும் அனுப்பியிருந்தது. தற்போதைய நீதிச்சட்டமுறைக்கு அமைய நடவடிக்கையெடுக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டள்ளது. எனினும், வலி வடக்கு பிரதேசசபை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக, இந்த விவகாரத்தின் தற்போதைய நிலை பற்றி உறுப்பினர் சஜீவன் ஒருமுறை கேள்வியெழுப்பிய போது, காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாது என்ற பொருள்பட தவிசாளர் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, உறுப்பினர் சஜீவன் தனியாளாக முயற்சியெடுத்து, குறிப்பிட்ட காணிகளின் உரிமையாளர்களை கண்டறிந்துள்ளார். காணி உரிமையாளரான பெண்ணொருவர் சுவிசிலும், மற்றும் இருவர் கொக்குவிலிலும், மற்றொருவர் வவுனியாவிலும் வதிவது கண்டறியப்பட்டது. எனினும், அவர்கள் யாரும் சட்ட நடவடிக்கைக்கு செல்ல தயாராக இருக்கவில்லையென சஜீவன் குறிப்பிடுகிறார்.

காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க மு டியாதென வலி வடக்கு தவிசாளர் அப்போது கூறியிருந்தாலும், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. 2023இல் போராட்டம் நடக்குமிடத்துக்கு வந்த பெண்மணியொருவர், தான் 3 வருடங்களின் முன்னரே காணி உறுதியை வலி வடக்கு தவிசாளரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இதுதான் தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் பின்னணி தகவல்.

வாய்ப்பேச்சு வீரர்கள்.

தையிட்டி விகாரை கடந்த நல்லாட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்போதே சர்ச்சைகள் ஆரம்பித்தன. ஆனாலும், மைத்திரி- ரணில் அரசுடன் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்- தேனிலவு கசந்து விடக்கூடாது என, அதைப்பற்றி மூச்சும் காட்டாமல் இருந்தனர். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாராவது ஒரு எம்.பி அக்கறையெடுத்து இந்த விவகாரத்தை பேசு பொருளாக்கியிருந்தால், விகாரை கட்டப்படுவதை தடுத்திருக்கலாம்.

சட்டவிரோத விகாரை இடிக்கப்பட வேண்டுமென மீசையை முறுக்கும் சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் அப்போது தேனிலவு கொண்டாடிய எம்.பிக்களில் அடக்கம். அவர்கள் மூச்சுக்கூட விடவில்லை. இப்பொழுது விகாரையை இடிக்க வேண்டுமென்கிறார்கள். சட்டவிரோத விகாரை அகற்றப்படத்தான் வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாம் என நினைக்கும் நமது எம்.பிக்களின் கபடத்தனத்தையும் இந்த இடத்தில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில்- வலி வடக்கு தவிசாளர், சபையின் உறுப்பினர்கள் மீது முதலாவது விரலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அடுத்த விரலும் நீட்டப்பட்டாலும், அடுத்தடுத்து, தமிழ் சமூகத்தின் அனைத்து தரப்பின் மீதும் விரல் நீட்டப்பட வேண்டும். ஏனெனில், விகாரைக்கான பணிகள் எல்லாம் பகிரங்கமாகவே நடந்தது. அப்போது நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். சட்டப்புலமை மூலம் தமிழர் பிரச்சினையை தீர்க்க பிறந்த மகா ஆளுமை என ஆதரவாளர்கள் வழிபடும் சுமந்திரனும் கப்சிப். அவர், அரசை கோப்படுத்தும், சங்கடப்படுத்தும் விவகாரங்களில் வழக்குக்கு செல்ல மாட்டார்… மேலோட்டமான சாதாரண விவகாரங்களிற்கே வழக்கிற்கு செல்வார் என்ற விமர்சனத்தையும் இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையில், தையிட்டி விகாரை தமிழ் சமூகத்தின் கூட்டு தவறு. இதை புரிந்து கொண்டு அதிக குறற்வாளி யார் என்ற வழக்காடு மன்றங்களை தவிர்த்து, இனியாவது எப்படி ஒருமித்து, விழிப்புடன் செயற்படுவதென்ற பொறிமுறையை கண்டடைய வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு: சங்கு, மான் அணிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Pagetamil

தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கும் பிரேரணை சபாநாயகரிடம்: 115 ஜேவிபி எம்.பிக்கள் கையொப்பம்; எதிர்க்கட்சியும் ஆதரவு!

Pagetamil

உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல்: 4 பேரை தடைசெய்தது பிரித்தானியா!

Pagetamil

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

Pagetamil

யாழ் மாநகரசபையில் மணிவண்ணன் தரப்பின் வேட்புமனு நிராகரிப்பு: யாழில் சங்கின் நிலை பரிதாபம்!

Pagetamil

Leave a Comment