ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி வழங்க வேண்டுமென வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளராகவும், கலைத்துறையிலும் சிறப்பான படைப்புகளை வழங்கிய இசைப்பிரியா, இலங்கையின் இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 17ம் திகதி வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கான ஆதாரங்கள் சனல் 4 ஊடகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன. சரணடைந்த நிலையில் ஒரு ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனித குலமே வெட்கித் தலை குனிய வேண்டிய அளவுக்கு கேவலமானது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “பிரதமர் அவர்களே, நீங்களும் ஒரு பெண் என்பதால், இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு நீதி வழங்கப்பட்ட வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.
நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரை பலர் சித்திரவதைகளுக்குள்ளாகி உயிரிழந்த நிலையிலும், இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான உறுதியும், அதை செயல்படுத்தும் நோக்கமும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இசைப்பிரியாவின் கணவர் சிறிராம் கொல்லப்பட்டதுடன், மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களிலேயே மருத்துவ வசதியும், உணவுத் தேவைகளும் இல்லாத காரணத்தால் புதுமாத்தளனில் உயிரிழந்தார். இத்தனை துயரங்களையும் சுமந்து, சரணடைந்த நிலையில் இருந்த ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இவரின் படுகொலைக்கான நீதி கிடைக்குமா? என சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.



