மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டாகாசம் தொடர்வதால், அப்பகுதி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரவு நேரங்களில் யானைகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் இரவு முழுவதும் தங்களது வயல்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட கனமழையால் ஏற்கனவே பெரும் பாதிப்பை சந்தித்த விவசாயிகள், மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்வதற்கும் போராடி வருகின்றனர். எனினும், அறுவடைக்கு முன்பே காட்டு யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி பயிர்களை அழிந்துவிடுகின்றன. இதனால், பல குடும்பங்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக, நிலைமை இன்னும் மோசமடையாத வகையில் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, யானைகள் நுழையாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, யானைகளால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.




