இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் (EDB) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா நேற்றைய தினம் (07) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக்க, வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை பொருளாதார ஸ்திர நிலையை அடைந்துள்ள நிலையில், அந்த அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற அரசாங்கம் முழு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஏற்றுமதியாளர்களை அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கும் விழாவின் முக்கிய நோக்கமாகும் எனவும், 1981ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள், இந்த ஆண்டு 2023/24 நிதியாண்டில் சிறந்த ஏற்றுமதியாளர்களை கௌரவிக்க வழங்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மொத்தமாக 14 உயரிய விருதுகளும், 51 தயாரிப்பு மற்றும் சேவைத் துறை விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும், விருது பெற்றவர்கள் ஜனாதிபதி ஏற்றுமதி விருது சின்னத்தை மூன்று ஆண்டுகளுக்கு சந்தைப்படுத்தல் அடையாளமாகப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உலக சந்தை ஒரு பரந்த வலயமாக மாறியுள்ள நிலையில், இலங்கை அதில் பங்குதாரராக மாறுவதற்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஜனாதிபதி தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, தரமான சந்தையில் நுழைவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், உலகளவில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணங்களை குறைக்கும் முயற்சியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்குத் தேவையான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் செலவுகளை கட்டுப்படுத்தி நிலையான விலைகளை வழங்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்க மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் தற்போதைய பொருளாதார அடித்தளத்துக்கு பாதிப்பில்லாத வகையில் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, பல பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், அமைச்சுகளின் செயலாளர்கள், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





