அமெரிக்காவையடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இஸ்ரேல் விலகுவதாக அறிவிப்பினை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்து, அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து விலகும் ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது எனவும், இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது எனவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இஸ்ரேல் பங்கேற்காது எனவும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில், குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிவதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடாக விளங்குவதாகவும் குறிப்பிட்ட இவர், இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானதாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகமாக இஸ்ரேலுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அதிக பாகுபாடு காட்டியுள்ளது. இனி இஸ்ரேல் இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.