சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்திற்கு விண்ணப்பிப்பதற்கும், விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (5) நடைபெற்ற அமர்வின் போது, ஆளும் தரப்பின் உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாவும், சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கும், பிரதேச சபைகள் மூலம் நிவாரண நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு புதிய கணினி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
ஏழ்மை ஒழிப்பு, கல்வி மற்றும் மத மேம்பாடு, மற்றும் நாட்டுக்கு சேவையாற்றிய தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டதெனவும், 1978ம் ஆண்டு 07ம் இலக்க சட்டத்தின் பிரகாரம், நிதியத்தின் தலைவராக ஜனாதிபதி மற்றும் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர் என மேலும் தெரிவித்த பிரதமர், “குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த கால அரசாங்கங்களில், ஜனாதிபதிகளின் நண்பர்கள் மற்றும் அவர்களது சார்பான அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே நிதி வழங்கப்பட்டது. இது முறைகேடாக பயன்படுத்தப்பட்டது,” எனவும், “இது பற்றி முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனவும் அவர் கூறினார்.



