சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா பாடசாலையில் நேற்று இரவு பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த பாடசாலையில் பெரும்பாலும் 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
தேர்வுகள் முடிந்ததால் பலரும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பியிருந்த நிலையில், சில மாணவர்கள் மட்டும் இன்னும் பாடசாலையில் தங்கி இருந்தனர். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களையும் பணியாளர்களையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த நபர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துயர சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் யார்? எந்த காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது? என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆழ்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.