நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, தரம் 1 முதன்மை சேவை அதிகாரிகளில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 79 பேர் நேர்காணலுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந் நேர்காணல்கள் பிப்ரவரி 6 முதல் 11 வரை இசுருபாவில் நடைபெறவுள்ளன. இந் நேர்காணலுக்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய பாடசாலைகளில் நிர்வாக செயல்பாடுகளை வலுப்படுத்த இதுபோன்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




