அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – பாண்டிருப்பு கடற்கரையில் இன்று (20) இரண்டு பெரிய கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் காலை நேரம் சென்ற கடற்றொழிலாளர்கள், சுமார் 3 அடி நீளமும் 25 முதல் 50 கிலோ எடையுள்ள இரண்டு கடலாமைகளை உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர். ஆழ்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கியிருக்கலாம் என கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கிய ஆமைகள் ஒலிவ் வகையைச் சேர்ந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த வாரம் பெரிய நீலாவணை பகுதியிலும் ஒரு பெரிய கடலாமை இறந்த நிலையில் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுகளின் தகவல் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சுற்றுச்சூழல் குறித்த விசாரணைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.




