தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில அபத்தமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், தேசிய மக்கள் சக்தியை குறிவைத்து அவதூறுகளை பரப்பி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இதுபோன்ற மலிவான தந்திரோபாயங்களுக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மிகப்பெரிய ஆணையை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார். பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மதம் மற்றும் இனவாதத்தை பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தும் கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை தோற்கடிக்க வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது அதற்கு நெருக்கமான எண்ணிக்கையை அல்லது எளிய பெரும்பான்மையை விட அதிகமாக பெறும் என்று அவர் கூறினார். எந்த கட்சிக்கும் ஆறில் ஐந்து பெரும்பான்மை தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த சில அரசியல் கட்சிகள் இன்னமும் வெறித்தனமாகவே இருக்கின்றன. தங்களுக்கு இப்படி ஒரு கதி வரும் என்று அந்த அரசியல் குழுக்கள் நினைக்கவே இல்லை.
தற்போது தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களை தவறாக வழிநடத்த முயலும் எதிர்க்கட்சிகளின் உத்திகளை முறியடிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் குழு உறுப்பினர்கள் அனைவரும் எமது கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்ததுடன், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பாரிய பொய்ப் பிரச்சாரத்தை சமூகமயப்படுத்துவதற்கும் செயற்பட்டனர். அவை அனைத்தும் அப்பட்டமான பொய் என தற்போது நிரூபணமாகியுள்ளது.
“எமக்கு எதிரான குழுக்கள் இனவாதத்தையும் மதத்தையும் எமக்கு எதிராகப் பயன்படுத்த முயன்றன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த நாடு இரத்தக்களரியாக மாறும் என அறிவிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் மக்கள் தங்கள் மதங்களைப் பின்பற்ற அனுமதிக்காது என்று அவர்கள் தெரிவித்தனர். பௌத்த விகாரைகள் அழிக்கப்படும் எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த ஊர்வலங்களைக் கூட அனுமதிக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கம்போடியா போன்ற நிலை நம் நாட்டிலும் ஏற்படும் என்றார்கள். பௌத்தம் அழிந்துவிடும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள். இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை என்றும் கூறினார்கள். எங்கள் குரல் பதிவுகளில் சில துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு, சிதைந்த கருத்துக்கள் சமூகமயமாக்கப்பட்டன. இவை சதிகள். நம்மை எதிர்க்கும் கட்சிகளின் அரசியல் வங்குரோத்து நிலையையே இவை காட்டுகின்றன.
ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியின் பின்னர் நாட்டில் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. இது ஒரு பதிவு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. பிறரை வெல்வதே தவிர பிறரை காயப்படுத்துவதல்ல நமது விருப்பம். அநுர ஜனாதிபதியான பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்திக்கச் சென்றார். அவர்களிடம் ஆசி பெற்றார்.
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு எங்களின் எதிரிகள் ஏற்கனவே எங்களைப் பற்றி பொய்களைப் பரப்பி வருகின்றனர். தற்போது நவம்பர் 14ஆம் திகதிக்கு மறுநாள் போயா நாள் என்றும், அன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். மதங்களைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்புவது கண்டிக்கப்பட வேண்டியது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவர் நாட்டைக் காப்பாற்றியதால், தன்னைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் மக்கள் அவரை தோற்கடித்தனர். அரசியல் சாசனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் அரசியலமைப்பை மீறியதால் அவரிடமிருந்து அரசியலமைப்பைக் கற்றுக்கொள்வது ஆபத்தானது என்று நாங்கள் நினைக்கிறோம்“ என்றார்.




