பசுமை அமைதி விருதுகளுக்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Date:

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்கள் மத்தியில் சூழற் கல்வி, சூழல் விழிப்புணர்வு மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்குரிய பசுமை அமைதி விருதுகளைத் தெரிவு செய்வதற்கான சூழல் பொதுஅறிவுப் பரீட்சை ஒக்ரோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிக்கையில்,

சூறையாடப்படும் இயற்கை வளங்கள், கண்மூடித்தனமான நிலப் பயன்பாடு, கட்டுப்பாடற்றுப் பெருகும் மாசுகள், சூடாகிவரும் பூமி, விஸ்வரூபம் பெற்று வரும் காலநிலை மாற்றம் ஆகியனவற்றின் கூட்டுத் தாக்குதல்களினால் இயற்கை மூச்சுத்திணறி வருகிறது. இந்நிலை நீடித்தால் விரைவிலேயே உலகம் பெரும் பிரளயத்துக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி இயற்கைச் சூழலை நாம் தொடர்ந்து மோசமாகச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையின் மீதான தாக்குதல்களை நிறுத்தி அதனுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச் செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் மத்தியில் சூழற் கல்வி, சூழல் விழிப்புணர்வு மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களுக்குப் பசுமை அமைதி விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது.

மாணவர்களிடையே 2024ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு சூழல் பொது அறிவுப் பரீட்சை இணையவழியூடாக 27.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) முன்னிரவு 7.00 மணி தொடங்கி 8.30 மணிவரை நடைபெறவுள்ளது. இப்பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் இலங்கையை வதிவிடமாகக் கொண்ட மாணவர்கள் எவரும் தோற்ற முடியும். இலவசமாக நடைபெறவுள்ள இப்பரீட்சையில் தோற்ற விரும்பும் மாணவர்கள் www.tamilnationalgreen.org இணையத்தளத்தின் ஊடாக 20.10.2024 இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

இப்பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். இவர்களிலிருந்து முதல் 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதிச் சான்றிதழோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். இவர்களில் முதல் 3 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ், சிறப்புப் பரிசுகளுடன் சூழலியல் ஆசான் க. சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். முதலாம் இடத்தைப் பெறும் மாணவர் 1 பவுண் தங்கப் பசுமை அமைதி விருதும், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர் வெள்ளிப் பசுமை அமைதி விருதும், மூன்றாம் இடத்தைப் பெறும் மாணவர் வெண்கலப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்

தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம்...

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்