சில கட்சிகள், அமைப்புக்களால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனிற்கு ஆதரவளிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
சில நாட்களின் முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் விதமாக, யாழ்ப்பாண பல்கலைகழக்க சமூகம் என அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறானதொரு அறிக்கை பற்றி செய்திகளின் மூலமே அறிந்து கொள்ள முடிந்தது என்றனர்.
தமது சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பிரதான வேட்பாளர்களிற்கு ஆதரவளிப்பதுடன், சிலர் பகிஸ்கரிப்பு கோரிக்கைக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
அண்மையில், ஜேவிபிக்கு ஆதரவளித்து புலமையாளர்கள் கையெழுத்திட்டு வெளியான அறிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 விரிவுரையாளர்களும் கையெழுத்திட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர்களில் பெரும்பாலானவர்களும் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை.
இந்த போலி அறிக்கையை, தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பீட தலைவர் ஒருவரும், பேராசிரியர் ஒருவரும் தயாரித்து வெளியிட்டிருக்கலாமென பல்கலைக்கழக வட்டாரங்களில் சந்தேகம் நிலவுகிறது.




