பிரபல நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா (ஜானி மாஸ்டர்) மீது தெலுங்கானா மாநிலம் சைபெராபாத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
உடன் பணியாற்றிய 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். அவரது புகாரில் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் அவுட்டோர் படப்பிடிப்பின்போது நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் நரசிங்கியில் உள்ள அவரது வீட்டில் பல முறை அவரைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376 (வன்புணர்வு), பிரிவு 506 (மிரட்டல்), பிரிவு 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் ஜானி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடு இருக்கும் பகுதியான நரசிங்கி காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இவ்வழக்கு குறித்து பெண்கள் பாதுகாப்பு பிரிவு (WSW) தெலுங்கானா டி.ஜி., ஷிகா கோயல் பேசும்போது, இவ்விவகாரம் குறித்து வழிகாட்டுதலுக்காகத் தெலுங்கானா திரைத்துறையினர் தன்னை அணுகியதாகவும், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (PoSH) சட்டத்தின் கீழ் உள்விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற பிரச்னைகளைத் திரையுலகம் தீவிரமாக எடுத்துக்கொள்வதும், பாதிக்கப்பட்ட ஊழியர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என அவர் கூறியுள்ளார்.
ஜானி மாஸ்டர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது, இது முதன்முறை அல்ல. கடந்த ஜூன் மாதம் சதீஷ் என்ற நடனக் கலைஞர், ஜானி திரைப்படத் துறையில் தனக்கு வாய்ப்புகளைத் தடுப்பதாகக் கூறி அவருக்கு எதிராகப் புகார் அளித்தார்.
2015-ம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக 2019ல் ஜானிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்த வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கும் ஜானி மாஸ்டரே நடனம் என்பது குறிப்பிடத்தக்கது.




