தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களித்து வாக்கை வீணடிக்காமல் மிக உபயோககரமாக பயன்படுத்த வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது,
இலங்கை தமிழ் அரசு கட்சியில் நம்பிக்கையாக உள்ளவர்களுக்கு நான் சொல்வது- சஜித் பிரேமதாசவை ஆதரியுங்கள். இது சிந்தித்து நாங்கள் எடுத்த முடிவு. தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் அனைத்தும் சஜித்தை ஆதரிப்பதற்கு ஒரு காரணமுள்ளது. எங்களை நாங்களே ஒதுக்கி வைக்காமல், இலங்கையில் நாமும் சம பிரஜைகள் என- எங்களுக்குரிய பங்கை நாம் பெற்றுக்கொண்டு பயணிப்பதுதான் சரியானது. வேறு எவருக்கு கொடுக்கும் வாக்குகளும் வீணாய் போன வாக்குகளே.
தேர்தலை பகிஸ்கரிப்பதோ, தமிழ் பொதுவேட்பாளர் என்ற மாயமானுக்கு வாக்களிப்பதோ உங்களுடைய ஜீவிய உரித்தான வாக்கை நீங்களே குழிதோண்டி புதைக்கும் செயலாக இருக்கும். வீணடிக்கிற செயலாக இருக்கும்.
ஜனநாயகத்தில் ஒவ்வொரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வருகின்ற போது, மக்களுக்கு தாம் விரும்பும் ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான உரித்தை கொடுக்கிறது. இந்த உரித்தை இல்லாமல் செய்வதற்கான பலவித மோசடிகளில் ஒன்றுதான் பகிஸ்கரிப்பு என்ற கோசம். மற்றொன்று தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசம்.
இந்த விடயங்களில் எடுபட்டு உங்களுடைய பொன்னான வாக்கை வீணடித்து விடாமல் மிக உபயோககரமாக நீங்கள் பாவிப்பதாக இருந்தால் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்க வேண்டும் என்றார்.
அத்துடன், இலங்கை தமிழ் அரசு கட்சியை வழிக்கு கொண்டு வருவோம் என கூறிக்கொண்டு புறப்பட்ட பொதுவேட்பாளர் ஏற்பாட்டு தரப்பினர், அது வெற்றியடையாத நிலையில், கட்சியிலிருந்து ஒருவரை பிரித்தெடுத்து பொதுவேட்பாளராக நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.




