மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை மாலை(27) மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மண்டூர் , கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் அமைந்துள்ள வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அவரது நடலம் மீட்கப்பட்டிருந்தது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போது, உயிரிழந்த நபர் அயல் வீடுகளுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பில் இணக்கசபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 26ஆம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்று வீடு திரும்பிய போது, சில குழு அல்லது நபர் அவரை தலையில் அடித்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
கொலையுடன் தொடர்புடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர்களே கொலைச் சந்தேக நபர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் 28ஆம் திகதி களவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



