2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் சட்டவிரோதமாகச் செயற்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வாகன சாரதியை கண்டுபிடிப்பதற்காக பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியின் மனைவி, அவர்களது குழந்தை மற்றும் சாரதியின் மாமியார் ஆகியோர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பதில் பணிப்பாளர் நெவில் சில்வா மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் மெத்தானந்த ஆகியோர் சட்டவிரோதமாக கைது செய்தமை மற்றும் சாரதியின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு அதிகாரிகளும் மனுதாரருக்கு தலா ரூ.250,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும், மனுதாரருக்கு இழப்பீடாக அரசு ரூ. 10,000 வழங்கவும் உத்தரவிட்டது.
அத்துடன், இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையைத் தொடங்குமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




