திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், `தொப்பி அம்மா’ என்று பிரபலமாகிக் கொண்டிருக்கும் பெண்ணை தேடிச் சென்று வணங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அரசியல் முடிவுகள் உட்பட எதுவாக இருந்தாலும் திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்த பிறகே வெளிப்படுத்துவார். அதே சமயம், கிரிவலப் பாதையில் தங்கியிருந்த `மூக்குப்பொடி’ சித்தர் என்ற சாமியார் ஒருவர் ஆசி கிடைத்தால்தான் அந்த முடிவுகளை துணிந்து எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் தினகரன். 2018-ம் ஆண்டு மூக்குப்பொடி சித்தர் இறந்துவிட்டதால், கிரிவலப் பாதையிலுள்ள சித்தரின் நினைவிடத்துக்குச் சென்று வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார் தினகரன்.
இப்போதும்கூட கிரிவலம் சென்று மூக்குப்பொடி சித்தர் நினைவிடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறார் தினகரன். இந்த நிலையில், தொப்பி அணிந்து, அழுக்கு உடையுடன் காணப்படும் பெண் ஒருவர் கிரிவலப் பாதையிலுள்ள மரத்தடி நிழலிலும், ஆசிரம வாசலிலும் படுத்துக் கிடக்கிறார்.
சமீப நாள்களாக அவருக்கு `தொப்பி அம்மா’ என்று பெயரிட்டு வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். ‘வாழும் பெண் சித்தர்’ என்று டிரெண்ட் ஆனதால் பக்தர்கள் பலரும் அந்த பெண்ணை தேடிச் சென்று வணங்க தொடங்கியிருக்கின்றனர். அவரிடம் உணவுப் பொருள்களையும் கொடுக்கின்றனர். அவர் சாப்பிட்டு தூக்கியெறியும் மீதியை சாப்பிட ஒருக் கூட்டமே பின்தொடர்கிறது.
அதிகபட்சமாக, அவர் குடித்துவிட்டு வைக்கும் டீ, காஃபியையும் தீர்த்தமாக குடிக்க முட்டி மோதுகின்றனர். பின்னால் வந்து தொந்தரவு செய்யும் பக்தர்களையும் சில நேரங்களில் கோபப்பட்டு அந்தப் பெண் தாக்குவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில்தான் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த டி.டி.வி.தினகரனும் தொப்பி அம்மா குறித்து அறிந்தவுடன் அவரை தேடிச்சென்று நீண்ட நேரமாக காத்திருந்து கையெடுத்து கும்பிட்டு வணங்கியிருக்கிறார். இதையடுத்து, அந்த பெண்ணை மேலும் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பதாகவும் கிரிவலப் பாதையில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.




