ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (25) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
அனேகமாக தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தையொட்டியே இந்த கலந்துரையாடல் நடக்குமென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தூதரகங்களில் பணம் பெற்று இயங்கும்- தம்மை சிவில் சமூகமென குறிப்பிடும் தனி நபர்கள் சிலரும், ராஜபக்ச தரப்புடன் நெருக்கமாக உள்ள சிலரும் தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசத்தை ஆரம்பிக்க- இந்த இரண்டு வகைக்குள் அடங்காத, வலுவான குரலற்ற தீவிர தமிழ் தேசிய அரசியல்வாதிகள் சிலரும் இந்த கோசத்தை ஆதரித்து வருகிறார்கள்.
கோட்பாட்டுரீதியாக அது நல்லதென்ற போதும், தற்போதைய சூழல் அதற்கு பொருத்தமற்றது என பெரும்பாலான மக்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தால், தமிழ் வாக்காளர்கள் சஜித், அநுரவுக்கு வாக்களிப்பார்கள், அதை தடுக்க தமிழ் பொதுவேட்பாளர் கோசம் களமிறக்கப்பட்டதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றும் நேற்றும் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்களிடம் தமிழ் பொதுவேட்பாளர் பற்றி விலாவாரியாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற அரசியல் பிரமுகர் ஒருவர், ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளரில் மிக ஆர்வமாக இருப்பதாக அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டார்.
இந்த பின்னணியில், இன்று மாலை 6 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் போது தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் குறித்து முக்கிய கலந்துரையாடல் நடக்குமென அறிய முடிகிறது.




