முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (10) காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த மனு தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரினார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை இம்மாதம் 28ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இந்த மனுவை பராமரிப்பது தொடர்பான முடிவை அறிவிக்குமாறு மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் பதும பண்டார உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.