எல்பிட்டிய பிரதான வீதியில் கட்டபால கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்று கன்ரர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையிலும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான எல்பிட்டிய, வல்லம்பகல, சுகதபால மாவத்தையைச் சேர்ந்த கலிங்க நிஹால் சோமரத்ன என்ற 68 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையும் அவரது பேரன் தினுல பெர்னாண்டோ (10) மற்றும் பேத்தி செனுலி பெர்னாண்டோ (07) ஆகியோரும் உயிரிழந்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த சாரதியின் மனைவி (61) மற்றும் அவரது மகள் (35) ஆகியோர் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அவரது பத்து வயது பேத்தி எல்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்பிட்டியவிலிருந்து அவிட்டய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், அவிட்டயவிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற கன்ரருமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.




