கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கை தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார துறை உயரதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாக
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச் சபை
உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (23) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற
நலன்புரிச்சங்கத்தின் பொதுச் சபை கூட்டத்தின் போது வைத்தியசாலை
பணிப்பாளர் யாப்பு விதிமுறைகளுக்கு மாறாக 200 க்கு மேற்பட்ட பொதுச் சபை
உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தை இடைநிறுத்தியமை தொடர்பிலேயே இம்
முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளனர்.
நலன்புரிச் சங்கத்தின் யாப்பின் பிரகாரமும், பொதுச் சபை உறுப்பினர்களின்
ஏகோபித்த தீர்மானங்களின் படியும் கூட்டத்தை நடாத்துமாறு பெரும்பான்மை
பொதுச் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதும் அவை கருத்தில்கொள்ளாது
தன்னிச்சையாக கூட்டத்தை நிறுத்தியமை என்பது வைத்தியசாலை பணிப்பாளர்
நலன்புரி சங்கம் தொடர்பில் தனது வரம்பை மீறி செயற்பட்டிருக்கின்றார்
என்பதனை சுட்டிகாட்டியே முறையிடவுள்ளதாக பொதுச் சபை உறுப்பினர்கள்
தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் தூர பிரதேசங்களிலிருந்தும் கடும் வெப்பமான காலநிலையையும்
கடந்து ஏராளமான பொதுச் சபை உறுப்பினர்கள் கலந்கொண்ட பொதுக் கூட்டத்திற்கு
மண்டப வாடகை, சிற்றூண்டி உணவு என மூன்றரை இலட்சத்திற்கு மேல் செலவு
செய்யப்பட்டுள்ள கூட்டத்தை தன்னிச்சையாக நிறுத்தி நோயாளர் நலன்புரிச்
சங்கத்தின் நிதி வீண் விரையமாவதற்கும் வைத்தியசாலை பணிப்பாளரே
பொறுப்பேற்க வேண்டும் எனவும் அம் முறைப்பாட்டில் குறிப்பிடவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.




