நெடுங்கேணி, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலுக்குள் யாரும் நுழைய முடியாதபடி பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட சென்ற சைவர்களும், ஏட்டிக்குப் போட்டியாக அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவும் ஆலயத்துக்குள் நுழைய முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளனர்.
மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு பொலிசாரால் தடங்கல் ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்தின் நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனை விசராணைக்கு எடுத்த நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலயவிடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலயநிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியது.
இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நேற்று மாலை உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த பூசாரி உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்தவருடம் உத்தரவு வழங்கியிருந்தது. அந்த உத்தரவை நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்திருந்தது. இந் நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை மீறி பொலிசார் குறித்த இருவரை கைதுசெய்திருந்தனர்.
இதேவேளை, வெடுக்குநாறிமலை சிவராத்திரி வழிபாட்டுக்கு எதிராக வவுனியாவிலுள்ள விகாராதிபதியொருவர் இனவாத பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழர்கள் வெடுக்குநாறிமலையை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், சிங்களவர்கள் இன்று திரண்டு வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை காரணமாக குறிப்பிட்டு, இன்று வழிபாடுகளுக்கு தடைகோரி பொலிசார் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்த சூழலில், இன்று காலை சிவராத்திரி வழிபாட்டுக்கு சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, பிக்கு தலைமையில் வந்த சிலரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.