பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள மணல் ஏற்றியபடி வந்த டிப்பர் வாகனமும், மோட்டார்ச் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். அந்த டிப்பர் வாகனத்தில் கள்ள மணல் ஏற்றிச் செல்லப்பட்டது. டிப்பரின் முன்பாக, பாதுகாப்புக்காக இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
பொலிசார் மறித்த போதும், டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிசார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர்.
இதன்போது டிப்பர் சாரதி மற்றும் டிப்பர் வாகனத்துக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மூவரும் இணைந்து பொலிசார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
இதன்போது போது நகரப் பகுதியில் கடமை இருந்து பொலிசார் சுற்றி வளைத்து தாக்கல் நடத்த முயன்ற மணல் கடத்தல் காரர்கள் இருவரை கைது செய்தனர்.
எனினும் டிப்பர் வாகனத்திற்கு முன்பாக வழிகாட்டி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
இணையடுத்து மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தப்பிச் சென்றவரை கைது செய்ய சாவகச்சேரி பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.