சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக அல்லது பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமைகள் மனுக்கள் ஏப்ரல் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
2023 நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக தென்னகோன் மூன்று மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஐந்து கட்சிகள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த மனுக்கள் இனி செல்லுபடியாகாது எனவும், நேற்றைய விசாரணைக்கு முன்னதாக ஜனதிபதியால், தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவை இனிமேல் பரிசீலிக்கப்படக் கூடாது எனவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், உபுல் குமாரப்பெரும, ஜெப்ரி அழகரத்தினம் உள்ளிட்ட சட்டத்தரணிகள், பல மனுக்கள் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ஜனாதிபதி பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை நிரந்தரமாக்கியது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நிரந்தர நியமனத்துக்கு எதிராகவும் தமது மனுக்களில் சவால் விடுத்துள்ளதாகவும் எனவே விசாரணையை தொடருமாறும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிரந்தர நியமனம் அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன வினவியபோது, அரசியலமைப்பு பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரேரணையை அங்கீகரித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான சமர்ப்பிப்புகள் மற்றும் அண்மைக்கால நிலவரங்களை பரிசீலித்த பின்னர், வழக்கை ஏப்ரல் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. இந்த மனுக்கள் தொடர்பான மற்ற ஆவணங்களை அந்த நாளில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பௌத்த பிக்குகள் பலரால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்குமாறு நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி மனோகர டி சில்வா கோரிக்கை விடுத்தார். பிக்குகள் தாக்கல் செய்யும் பிரேரணைக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றம் தனது முடிவை ஏப்ரல் 2 ஆம் திகதி அறிவிக்கும்.




