நாரம்மலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் குடும்பத்திற்கு இலங்கை காவல்துறை இழப்பீடாக ரூ. 1 மில்லியன் ரூபா வழங்கியுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அலவ்வயில் உள்ள உயிரிழந்த சாரதியின் இல்லத்தில் வைத்து நட்டஈட்டை கையளித்தார்.
உப பொலிஸ் பரிசேதகரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டாவினால் 41 வயது லொறி சாரதி பலியான சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்தது.
உப பொலிஸ் பரிசோதகர், ஒரு கான்ஸ்டபிள் சிவில் உடையில் சென்று, சாரதியை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். ஆனால் அவர் உத்தரவை மீறியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் லொறியை துரத்திச் சென்று நிறுத்தினர். இதன்போது துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.
பலத்த காயமடைந்த சாரதி நாரம்மல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், உப பொலிஸ் பரிசோதகரை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நாரம்மல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக இரு பொலிசாரின் கடமைகளையும் பொலிஸார் இடைநிறுத்தியுள்ளனர்.




