யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் கைதான 20 இளைஞர்களை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருளை விற்பனை, உடமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும், போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கைதானவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றம் ஊடாக போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என யாழ்ப்பாணபிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.




