ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்த மாப்பிள்ளை பற்றிய சுவாரஸ்ய செய்தி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரி தாலுகா பகுதியில் இந்த திருமணம் நடந்துள்ளது.
அம்பதாரா கிராமத்தில் வசிக்கும் நரேஷ், கந்தேரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள் ரேகா ரோட்டையும், செர்ரவாலா கிராமத்தைச் சேர்ந்த அனிதா தாமோரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
மணமேடையில் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ஏழு முறை சுற்றி வந்தார்.
இந்த திருமண அழைப்பிதழில் மணமகன் நரேஷின் பெயரும், இரு மணமகள்களான ரேகா மற்றும் அனிதாவின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த திருமணம் இந்து முறைப்படி நடந்தது. இந்த திருமணத்தில் மூன்று குடும்பத்தினரும் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர். கிராமத்தில் இதுபோன்ற முதல் திருமணம் இதுவாகும். எனவே, விசேஷ திருமணத்தால், கிராமம் முழுவதும் பண்டிகை சூழல் காணப்பட்டது. மணமகளின் குடும்பத்தினர் மணமகனை தோளில் சுமந்து கொண்டு பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ச்சியான பாடல்களை பாடினர்.
மாப்பிள்ளை நரேஷ் குஜராத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். ரேகா மற்றும் அனிதாவும் அங்கு கூலி வேலை செய்து வந்தனர். இந்த நேரத்தில் நரேஷ் ரேகாவையும் அனிதாவையும் சந்தித்து, காதல் வசப்பட்டார். இரண்டு காதலிகளையும் ஒன்றாக திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து, மூன்று குடும்பத்தினரின் சம்மதத்துடனும், சமுதாய முறைப்படியும் திருமணம் நடந்தது. இந்த வித்தியாசமான திருமணம் அப்பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுபோன்ற திருமணத்தை இதுவரை பார்த்ததில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.




