தெனியாய பல்லேகம பிரதேசத்தில் இளம் பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், கட்டுவன உடகோமடிய பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் விரித்தமுல்ல கமகே தனுஷ்க என்பவரே தாக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பல்லேகம கங்கொட வீதி சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் பிக்கு தாக்கியுள்ளார்.
பல்லேகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் 17 வயதுடைய பிக்குவே தாக்குதல் நடத்தினார்.
படுகாயமடைந்த பொலிஸ்காரர் உடனடியாக தெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான உத்தியோகத்தர் எனவும், சந்தேக நபரான பிக்குவின் 26 வயதுடைய சகோதரியுடன் அவர் கள்ளக்காதல் உறவில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பொலிஸ்காரர் யுவதியின் வீட்டிற்கு சென்ற போது, பிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு செய்தியொன்றை வழங்கியதோடு, அதன் பிரகாரம் இருவரும் பல்லேகம கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் சந்தித்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, சந்தேக நபர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் தாக்கப்பட்டமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.