அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் எம்பிலிப்பிட்டிய மகாவலி நிலங்களில் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து அனுமதி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழு கவனத்தில் எடுத்துக் கொண்டது.
அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழுவின் போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அதுமட்டுமல்லாமல், மாணிக்கக் கற்கள் அகழ்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் பங்கு, சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு உரிய பங்கினை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் நடைபெற்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்த தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் SMILE கடன் திட்டம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளையும் குழு அங்கீகரித்துள்ளது.
அஜித் ராஜபக்ஷ, பிரதி சபாநாயகர், இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, விஜித பேருகொட, பியல் நிஷாந்த டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சரித ஹேரத், ஜகத் குமார சுமித்ராராச்சி, குலசிங்கம் திலீபன், உதயகாந்த குணதிலக்க, சுமித் உடுகும்புர, குணதிலக ராஜபக்ஷ, குமாரசிறி ஆகியோர் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




