மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் கிறவல் அகழும் முயற்சியில் ஈடுபட்ட தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்களை, இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இலுப்படிச்சேனை, பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன்கட்டு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி, அடாவடியாக கிறவல் அள்ள முயற்சித்தவர்களை, சம்பவ இடத்துக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தடுத்து நிறுத்தினார்.
சோதையன்கட்டு பகுதியில் உள்ள குளம் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. அதனாலேயே சோதையன்கட்டு என்ற பெயர் ஏற்பட்டது.
அந்த பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உக்காத 70,000 கிலோகிராம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
சோழர்களால் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் வனவள திணைக்களத்தினரால் எல்லையிடப்பட்ட பகுதிக்குள் அமைந்துள்ளது. அந்த பகுதிக்குள் மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், குளத்தை அண்மித்த பகுதியில் கிரவல் அகழ்வதற்காக வனவள திணைக்களம் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலாளர், கிராம சேவகர் யாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
தென்னிலங்கையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர், மட்டக்களப்பில் உள்ள ஒருவரின் பெயரில் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
நேற்று கிரவல் அகழும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் அங்கு சென்று, கிரவல் அகழும் பணியை நிறுத்த உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இன்றும் தொடர்ந்து அங்கு கிரவல் அகழப்பட்டது. இது தொடர்பில் பிரதேச மக்கள் கேள்வியெழுப்பிய போது, அவர்கள் மிரட்டப்பட்டதுடன், அவர்களை வீடியோ எடுத்தும் அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அறிந்த இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இன்று பகல் சம்பவ இடத்துக்கு சென்றார்.அவருடன் செங்கலடி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.
ஒப்பந்தக்காரர்களுக்கும், இராஜாங்க அமைச்சருக்குமிடையில் வாய்த்தர்க்கம் உருவானது. இதன்போது, ஊடகவியலாளர் ஒருவரை ஒப்பந்தக்காரர்களில் ஒருவர் மிரட்டி தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுக்க முற்பட்ட போது, ஆவேசமான இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கோபமாக முன்னால் சென்ற, ஒப்பந்தக்காரரை தள்ளிவிட்டதுடன், அவரிடமிருந்த கைத்தொலைபேசியை பறித்து, அங்கிருந்த உபபொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் கையளித்தார்.
யார் தடுத்தாலும், மண் அள்ளியே தீருவோம், வன இலாகா, புவிசரிதவியல் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளோம், அதிக பணம் செலவிட்டுள்ளோம் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.
முடியுமானால் கிறவல் அகழ்ந்து பார்க்கும்படி இராஜாங்க அமைச்சர் அவர்களிடம் சவால் விட்டார்.
அந்த பகுதிக்கு முறையான வீதி இல்லாத நிலையில் பொதுமக்களின் விவசாய நிலங்களின் ஊடாகவே கிறவல் கொண்டு செல்லப்படுகிறது.
கிறவல் அகழ்வதால் அங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளுடன், நீர் கலக்கும் அபாயமும் உள்ளது. அத்துடன், தமிழர்களின் பூர்வீக அடையாளங்களில் ஒன்றாக சோதையன்கட்டு அழிவடையும்.
இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த கரடியனாறு பொலிசார், நிலைமையை சமாளிக்க முற்பட்டனர்.
சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்பதாகவும், அதுவரை பணிகளை நிறுத்துமாறும் பிரதேச செயலாளரும் குறிப்பிட்டார்.



