2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நவ்பர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான மேலதிக விசாரணைகளுக்காக இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. .
இந்த வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப்பத்திரிகையில் உள்ள 23,270 குற்றச்சாட்டுகளில் 7,745 குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முதலியார் டி.டி அபேகுணவர்தனவினால் சிங்கள மொழியில் வாசிக்கப்பட்டதுடன், அதன் தமிழாக்கத்தை முதலியார் ஏ.எஸ்.எம்.ரிஸ்வான் மற்றும் டி.டி.சதாம் ஆகியோர் திறந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாசித்தனர்.
அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல் அட்-பேரினால் இன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான குற்றச்சாட்டுகளை மேலதிக வாசிப்புக்கு ஒத்திவைத்தது.
பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்ரிலா கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம், தெஹிவளை ட்ராபிகல் இன்ன் ஆகிய 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 25 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட பதினேழாவது சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி திடீர் இதய நோயினால் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மரணமடைந்ததாக நீதிமன்றத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சதி, தயாரிப்பு, உதவி மற்றும் ஊக்கம், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை சேகரித்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 23, 270 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




