வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வடமுனையில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி 7 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நாக தம்பிரான் வீதி, வடமுனையைச் சேர்ந்த பெருமாள் ராமு விமலன் (69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (3) வெள்ளிக் கிழமை மாலை 6.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நோய்வாய்பட்டிருந்த தனது தாயாருக்கு தேவையான மாத்திரையை அருகிலுள்ள வெலிக்கந்தை கிராமத்திற்கு சென்று அங்குள்ள பாமசியில் கொள்வனவு செய்து திரும்பும் வழியில் வீதியில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.
காயமுற்றவரை வெலிக்கந்தை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அங்கு மரண விசாரணை அதிகாரியின் கட்டளையின் பிரகாரம் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்ஆனந்தன் மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
குறித்த வடமுனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் பலர் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் யானையில் இருந்து தங்களை பாதுகாத்து தருமாறு பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-க.ருத்திரன்-




