குருந்துவத்தையில் உள்ள ஆயத்த ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து இரண்டு டெனிம் காற்சட்டைகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட இளைஞனுக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு 8 ஐச் சேர்ந்த ஆர்.பி.டி.சாமர என்ற இளைஞருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக பல பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சந்தேகநபர் 19,900 ரூபா பெறுமதியான இரண்டு திருடப்பட்ட டெனிம் காற்சட்டைகளை அணிந்து கடையிலிருந்து வெளியேற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆறு வருட விசாரணைக்குப் பிறகு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.




