தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தனித்தலைமை வேண்டாம், கூட்டுத் தலைமையே போதுமானது என நேற்று (18) வவுனியாவில் நடந்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு முதல் நாளிலேயே, தலைமை தெரிவு இடம்பெற வாய்ப்பில்லையென்பதை தமிழ் பக்கம் குறிப்பிட்டிருந்தது. ஏனெனில், ஏற்கெனவே கட்சிகளுக்குள் அதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு விட்டது.
இதனால், நேற்று வவுனியாவில் நடந்த கூட்டத்தில் தலைமைப் பதவி பற்றி பேசப்படவேயில்லை. எனினும், சில ஊடகங்கள் தவறாக இன்று செய்தி வெளியிட்டுள்ளன. தலைமைப் பதவிக்காக நீண்ட நேரம் விவகாதிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அது உண்மையல்ல.
தலைமை பதவி தொடர்பாக நேற்று பேசப்படவேயில்லை.
புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தனை தலைவராக்கலாம் என கூட்டணிக்குள் பரவலான அபிப்பிராயமிருந்தது. என்றாலும், அவர் அதை ஏற்க மறுத்ததுடன், தலைமை விவகாரத்தை கைவிடலாமென கட்சிகள் ஏகமனதாக கடந்த 15ஆம் திகதிக்கு முன்னரே தீர்மானித்து விட்டன.
அது பற்றிய உள்ளக கலந்துரையாடல்களை நன்கு அறிந்ததை தொடர்ந்தே, 18ஆம் திகதி வவுனியா கூட்டத்தில் தலைமை தெரிவுக்கு வாய்ப்பில்லையென்பதை குறிப்பிட்டிருந்தோம்.
கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பாக கணிசமான நேரம் கலந்துரையாடியதால் கூட்டம் நீண்டநேரம் எடுத்துக் கொண்டது. யாப்பில் திருத்தங்கள் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளன. இது இனி தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதேவேளை, நேற்றைய கூட்டம் நீடித்தமைக்கு தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தாவின் விவாதங்களும் மற்றொரு காரணமாக அமைந்தது. அவர் சில விடயங்களில் நீண்டநேரம் விடாப்பிடியாக விவாதித்துக் கொண்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தில் அதிகநேரம் செலவிடப்பட்டது யாப்பு திருத்தத்துக்கு. அதற்கடுத்ததாக அதிகநேரம் விவாதிக்கப்பட்டது, தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் விவகாரத்தில்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது, தமிழ் மக்களின் எதிர்பார்பை மீறி, தனித்து போட்டியிடுவதாக தமிழ் அரசு கட்சி தீர்மானித்தது. 2004 இல் ஆனந்தசங்கரி கூட்டமைப்பின் சின்னத்தை திருடிக்கொண்டு ஓடிய சம்பவத்தை போல, தமிழ் அரசு கட்சியின் செயற்பாடு அமைந்துள்ளது என அப்போது பரவலாக விமர்சிக்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் தமிழ் அரசு கட்சி கடைசி நேரத்தில் காலைவாரியது. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும் என்றுதான் தமிழ் அரசு கட்சி நினைத்தது. என்றாலும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியென்ற பதிவு செய்யப்பட்ட கட்சியை பயன்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தது.
அந்த கட்சியின் செயலாளர் ஆர்.நல்லநாதர். அவர் தேர்தல் அரசியல் நோக்கம் கொண்டவரல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர், ஊடகப்பேச்சாளர், பொருளாளர் பதவிகளிற்கு நியமனங்கள் நடந்தபோது, ஸ்ரீகாந்தா ஒரு புதுக்குண்டை தூக்கிப் போட்டார்.
செயலாளரை மாற்றி, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு அதை வழங்குங்கள் என.
பலரும் அவருக்கு அதை புரிய வைக்க முயன்றனர். தற்போதுதான் கூட்டணி ஆரம்பித்தது, அந்த கட்சியை இதுவரை பாதுகாத்தவர்களிடமிருந்து பறித்து புதியவர்களிடம் கொடுங்கள் என்பது நியாயமான கருத்தல்ல, 2 வருடங்களின் பின்னர் செயலாளரை மாற்றலாம் என குறிப்பிட்டனர்.
என்றாலும், ஸ்ரீகாந்தா விடவில்லை. விவாதம் செய்து கொண்டேயிருந்தார். இது முடிவில்லாமல் நீண்டநேரம் நீடித்தது. கூட்ட நேரம் வீணாக போய்க்கொண்டிருக்கிறது என பலரும் சுட்டிக்காட்டியும் ஸ்ரீகாந்தா கேட்கவில்லை.
இந்த சமயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஒரு “டோஸ்“ கொடுத்தார். “விக்னேஸ்வரன் மாதிரி கதைக்காதீர்கள். அவரும் இப்படித்தான். எமது கட்சியின் செயலாளரை மாற்ற வேண்டுமென்றார். நாங்கள் அதை செய்தோம். அவர் விட்டுவிட்டு போய் விட்டார். அப்படியா செயற்பட போகிறீர்கள்?“ என கேட்டார்.
இது ஸ்ரீகாந்தாவை கோபமடைய வைத்தாலும், விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதேபோல, கூட்டத்தின் ஆரம்பத்திலும், இன்றைய கூட்டத்தில் நியமனங்கள் எதுவும் செய்ய வேண்டாமென்றார். கூட்டணிக்கு எந்த நியமனங்களும் செய்யாமல் சும்மா கூடிக்கதைத்துக் கொண்டிருக்க முடியுமா என ஏனையவர்கள் காட்டமாக கேட்டு, இந்த விவகாரத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.




