அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு தமது கட்சி ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவித்தார்.
“மக்களின் கருத்தை அறிய முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம். மக்களின் புதிய ஆணையைப் பொறுத்து அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று நாங்கள் அவரிடம் கூறியுள்ளோம்” என அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“ஜனாதிபதி எங்களிடம் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் தவறான நபர்களுடன் இணைந்திருப்பது முக்கிய பிரச்சினை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பொதுஜன பெரமுனவுடன் அவர் இருக்கிறார். இதுவே எங்களை ஜனாதிபதியுடன் வேலை செய்ய விடாமல் தடுக்கும் முக்கிய காரணம்.” என்றார்.
“அதே நேரத்தில் சட்ட மாநாட்டில் ஜனாதிபதியின் சமீபத்திய கருத்துக்களை நாங்கள் வரவேற்கவில்லை. மக்கள் தேர்தல்களால் சோர்வடைந்து விட்டதாகவும், எதிர்காலத் தேர்தல்களில் எந்தக் கட்சியும் 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தேர்தல் வரைபடம் தற்காலிகமாக மடிக்கப்பட்டு, இனிவரும் காலங்களில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி சுட்டிக்காட்ட முயல்வதாக நாம் கருதுகிறோம். பொது வாக்கெடுப்பு நடத்தி தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைக்க மக்களின் ஒப்புதலைப் பெறுவதுதான் ஜனாதிபதி செய்யக்கூடிய சரியான விஷயம். எவ்வாறாயினும், ஜனாதிபதி, பொது, மாகாண சபைகள் அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் என எந்தவொரு தேர்தலையும் ஒத்திவைக்காமல் நடத்துமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நிலுவையில் உள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.



