ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு வந்த கொழும்பு இலகு ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் அரசாங்கத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாரிய திட்டங்களை வெளிநாட்டின் தலையீட்டில் அல்லது கட்சியின் தலையீட்டில் இரு தரப்பினரின் இணக்கப்பாட்டின்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாத வகையில் எதிர்காலத்தில் பாராளுமன்றம் சட்டங்களை இயற்றும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பெரிய அளவிலான திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் திட்டத்தின் வருடாந்திர அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (25) காலை டோக்கியோவில் இடம்பெற்றது.
அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜப்பான் பிரதமர் மிகவும் அன்புடன் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடந்த சுமூகமான உரையாடலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
முன்னைய கோட்டாபய அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான முடிவுகளில் ஒன்றாக, யப்பானின் இந்த இலகு ரயில் திட்டமும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.